Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, August 23, 2010

மறுகா

..........................
திரும்புகிறேன்
..........................
..........................
..........................
மீண்டும்
முழுமையுடன் 
மரணிக்கிறேன்
............................
............................
............................
- தனியாக

Sunday, June 6, 2010

எனக்கான ஆகாயம்

 


மிக நீண்ட வனாந்தரத்தை கடக்க வேண்டிய
பட்சியை ஒத்த
கட்டாயத்தில் நான் !
கண் முன்னே விரிவது பிறிதொரு வனாந்தரமாகவோ
அல்லது கனல் கனன்ற வனமாகவோ இருக்க கூடும்
அந்தி சாயும் பொழுதுகளில்
கால் பற்ற கொப்பற்ற
இறக்கை வலிக்கும் பயணமாக்கூட
அது பரிணமிக்க கூடும்

சூரியனின் தகிப்பை
நட்சத்திரங்கள் முளைத்த வெளிகளிலும்
உணர முடியும்
நேற்றைய கிளையின் கொப்பை
ஒத்த உபசரிப்பை
ராத்திரியின் சாயம் போகும் வரை
ரகசியம் பேசும் இலைகளை
பின்னதான ஒரு நாளில் மீண்டு சந்திப்பதும்
நெடுதுயில் கொள்ளும் தருணங்களும்...

புள்ளினங்கள் அற்ற ஆகாயத்தில் புள்ளியாய் மிதக்கும் போது 
இறக்கை இன்னும் இலேசாகிறது,
மனசு கனக்கிறது
ஏழு மலை ஏழு கடல் தாண்டிய சாகசங்கள்...
நிறங்கள் நிரந்தரமற்று நிதர்சனங்களாய்
நீல கடலும் நெடுதூரம்

மரணத்தின் வலிகளுடன் உயிர் உருகிய தவங்கள்
வரங்கள்
ஏதுமற்ற ஒன்றிற்காய்
உணர்வுகள் உச்சுக்கொட்டுகின்றன...
ஆனாலும்
எனக்கான ஆகாயம்
இன்னும் திறந்தே இருக்கிறது !

Monday, May 31, 2010

பெயர்


 பாவம் 
அம்மா! அப்பா!
எவ்வளவு கஷ்டப்பட்டார்களோ 
பெயர் வைக்க?
நான் மிக சாதரணமாக 
ஒரு இடைவெளியைத்தான் 
கூட்டி விட்டேன்
ஐரோப்பிய பெயர்
தயார்!

Thursday, May 13, 2010

அன்றொரு நாள்

மிக அடர்ந்த கருமை கவிழ்ந்த இரவு
நிலவைத் தொலைத்த வானம்
என் நிழலைக்கூட காணவில்லை
நிசப்தம்.... – என் சுவடுகளைத் தவிர
மெல்லிய காற்றுக்கூட மேனி வலிக்கவைக்கிறது
பாதை வளைவுகள்
பதாதை பயமுறுத்தல்களை கடந்து
மனம் முன்னதான ஒரு தினத்தில்
மீசை தடித்த
மேனி கறுத்த
மறவனாய் ஒன்றிப்போயிருந்த்து....
காலவெளியின் கட்டுப்பாடு தாண்டி
கரைந்து போயிருந்த்து....

நினைவை விலக்கி,
முன்னங்கால் ஒன்றை முன் இழுத்த படி
மூன்றுகால் தள்ளாட்டத்தில் ஒரு நாய்!
இன்னொரு ஜீவன்!
சுவாசிக்க முடியவில்லை....
அடி வயிற்றை உப்பி
மூச்சை உள் இழுத்து
நாக்கின் ஊடே அது வெளியேற்றிய
உயிர்!

ஒன்று....
இரண்டு....
மூன்றாவது தாவலில் என்னை
நெருங்கிற்று
ஒரே ஒரு கணம்!
நிலைக்குத்தாக விழிகளை ஊடறுத்து
மனசுக்கு நெருக்கமான ஒரு பரிவர்த்தனை!

அந்த நாய் என்னை கடந்து போயிற்று!
என்னால் காட்சிகளின் கலங்கலான திரைக்கு
திரும்பிபோக முடியவில்லை
அல்லது விருப்பமில்லை!

Monday, April 19, 2010

நானொரு இயலாதவன்

நானொரு இயலாதவன்!
என்ன, சூரியன் மரித்த பாதைகளிலேயே
நடந்து கொண்டிருக்கிறேன்
வாழ்ந்து கெட்ட இனத்தின் வார்த்தைகளின் வலி....
மரிக்கும் தருணம் குறித்த எதிர்பார்ப்புகள்....
விடியலை குறித்த பெருவிருப்புடன்
விடியாமலே போன இரவுகள்
இன்னும்,
நினைக்க விரும்பாத நினைவுகள்
கண்கள் மூடிய காலங்கள்
ஏராளம்!
சக மனிதன் மீதான நம்பிக்கை என்பது
நூற்றாண்டு தொலைவில்!
"எப்படியெல்லாம் ஏன்?"
வன்மம் மனசு முழுக்க....
வெறுத்து போகும் உயிரோடிருத்தலின் ஈர்ப்பு....
எத்தனை முறை செத்துப்போவது?
தெரு நாயின் ஓலம்
மனசுக்கு என்னமோ செய்கிறது
நாடி நாளம் எல்லாம் படர்ந்து,
முதுகுத்தண்டை ஊடறுத்து ,
நெற்றிப்பொட்டில் அடித்து....
உன்மத்தம்!
புறக்கணிப்புகள்....
ஏமாற்றங்கள்....
ஏக்கங்கள்....
மீண்டும்
எதிர்பார்ப்புக்கள் - ஏதாவது ஒன்றிற்காய்!
என்ன செய்வது,
நானொரு இயலாதவன்
சூரியன் மரித்த பாதைகளிலேயே
நடந்து கொண்டிருக்கிறேன்...

Tuesday, April 6, 2010

" செத்து விட தோன்றுகின்ற தருணங்களும் நானும் "

மனசுக்கு வால் முளைத்து கொப்பு தாவும்
பூகோளத்தின் மூலையில் தனியாய் நின்று பழகும்
Aprocalipto, Avatar என்று காட்சி மாறும்
ஏன் என்று தெரியாத கேள்வி
ஏகாந்தம் பூசிக்கொண்ட வானம்
கண்ணை மூடி காட்சி மறக்கையில்
கற்பனையில் வந்து போகும் கரும்புள்ளி

போகுமிடமெல்லாம் பூத்து கிடக்கிறது - அரைகுறையாய் விளங்கும்
அந்நிய மொழி சம்பாஷனைகள்
கணன்று வரும் கோபமும்....
யதார்த்ததின் மீதான பிடிப்புகளும்....

தனியான பயணங்களை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறது மனசு
எப்போதோ கேட்ட பாடல் மீதான ஈர்ப்பு
இப்பொழுதும் விளங்காத இருண்மை
என்னவென்று தெரியாத தருணங்களில்
எதுமே செய்யாது இருக்கிறது உள்ளுணர்வு
"இது இப்படித்தான்"
இன்னும் எத்தனை நாள்களுக்கு?
ஏதேதோ....
கனவை கடந்து போகும் கற்பனைகள்

தூக்கம் மறந்த இரவுகள்....
சூன்யத்தில் இருப்பை தக்க வைப்பதற்கான போராட்டங்கள்....
இன்னும் தொடர்கின்றன
புரிதலும்....
தெரிதலும்....

மையப்புள்ளியில் மனசு நிற்கிறது
கண்கள் மட்டும் காட்சி திரைக்கு அப்பால்!
அவமானப்பட்ட தருணங்கள் அப்படியே ஆழ்மனதில் நிற்கிறது!
மொழிகளின் ஆளுமையை இழந்து விட்ட பிறகு....
ஒற்றை பெருமூச்சு!
இயலாமையின் வீச்சு!
எங்கோ தொலைவில் ஒற்றை காகம் கரைகிறது.

Wednesday, March 31, 2010

நேற்றைய நினைப்புக்கள்

யாருமில்லாத சூன்யத்தில்
தன் இருப்பை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது
பாழடைந்த வீடு!

எழுத உட்காந்து கண் மூடி யோசித்து
முனிவனாகும் போதெல்லாம் வரமறுக்கிறது
கவிதை

மூன்றாவது வாரமாய் பார்க்கிறேன்
இன்றும் காணவில்லை
bus stand பிச்சைகாரனை

சாலையோர சுவரில் யாரோ ஒருவன் சிரிக்கிறான்
கறுப்பு வெள்ளையில்
- மரண அறிவித்தல்

எப்பொழுதெல்லாம் எழுத நினைக்கிறேனோ
அப்பொழுதெல்லாம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது
அவமானப்பட்ட தருணங்கள்!

கடந்து போனவர்கள்

free counter

நான்....

My photo
Colombo, Sri Lanka
மனசுக்குள் ஒரு சாத்தான் அது மெல்ல வளர்ந்து விஸ்வரூபம் எடுக்க துடிக்கிறது.... நடிக்கிறது! அந்த காட்சி குழப்பத்தில் மனசும் கொஞ்சம்தான் கிறங்கி போகிறது! இன்றோ, நாளையோ... நான் ஒரு துரோகி! அல்லது நேற்றாகக்கூட இருந்திருக்கலாம்!

கூடவே வருபவர்கள்