மிக அடர்ந்த கருமை கவிழ்ந்த இரவு
நிலவைத் தொலைத்த வானம்
என் நிழலைக்கூட காணவில்லை
நிசப்தம்.... – என் சுவடுகளைத் தவிர
மெல்லிய காற்றுக்கூட மேனி வலிக்கவைக்கிறது
பாதை வளைவுகள்
பதாதை பயமுறுத்தல்களை கடந்து
மனம் முன்னதான ஒரு தினத்தில்
மீசை தடித்த
மேனி கறுத்த
மறவனாய் ஒன்றிப்போயிருந்த்து....
காலவெளியின் கட்டுப்பாடு தாண்டி
கரைந்து போயிருந்த்து....
நினைவை விலக்கி,
முன்னங்கால் ஒன்றை முன் இழுத்த படி
மூன்றுகால் தள்ளாட்டத்தில் ஒரு நாய்!
இன்னொரு ஜீவன்!
சுவாசிக்க முடியவில்லை....
அடி வயிற்றை உப்பி
மூச்சை உள் இழுத்து
நாக்கின் ஊடே அது வெளியேற்றிய
உயிர்!
ஒன்று....
இரண்டு....
மூன்றாவது தாவலில் என்னை
நெருங்கிற்று
ஒரே ஒரு கணம்!
நிலைக்குத்தாக விழிகளை ஊடறுத்து
மனசுக்கு நெருக்கமான ஒரு பரிவர்த்தனை!
அந்த நாய் என்னை கடந்து போயிற்று!
என்னால் காட்சிகளின் கலங்கலான திரைக்கு
திரும்பிபோக முடியவில்லை
அல்லது விருப்பமில்லை!