Monday, April 19, 2010

நானொரு இயலாதவன்

நானொரு இயலாதவன்!
என்ன, சூரியன் மரித்த பாதைகளிலேயே
நடந்து கொண்டிருக்கிறேன்
வாழ்ந்து கெட்ட இனத்தின் வார்த்தைகளின் வலி....
மரிக்கும் தருணம் குறித்த எதிர்பார்ப்புகள்....
விடியலை குறித்த பெருவிருப்புடன்
விடியாமலே போன இரவுகள்
இன்னும்,
நினைக்க விரும்பாத நினைவுகள்
கண்கள் மூடிய காலங்கள்
ஏராளம்!
சக மனிதன் மீதான நம்பிக்கை என்பது
நூற்றாண்டு தொலைவில்!
"எப்படியெல்லாம் ஏன்?"
வன்மம் மனசு முழுக்க....
வெறுத்து போகும் உயிரோடிருத்தலின் ஈர்ப்பு....
எத்தனை முறை செத்துப்போவது?
தெரு நாயின் ஓலம்
மனசுக்கு என்னமோ செய்கிறது
நாடி நாளம் எல்லாம் படர்ந்து,
முதுகுத்தண்டை ஊடறுத்து ,
நெற்றிப்பொட்டில் அடித்து....
உன்மத்தம்!
புறக்கணிப்புகள்....
ஏமாற்றங்கள்....
ஏக்கங்கள்....
மீண்டும்
எதிர்பார்ப்புக்கள் - ஏதாவது ஒன்றிற்காய்!
என்ன செய்வது,
நானொரு இயலாதவன்
சூரியன் மரித்த பாதைகளிலேயே
நடந்து கொண்டிருக்கிறேன்...

Tuesday, April 6, 2010

" செத்து விட தோன்றுகின்ற தருணங்களும் நானும் "

மனசுக்கு வால் முளைத்து கொப்பு தாவும்
பூகோளத்தின் மூலையில் தனியாய் நின்று பழகும்
Aprocalipto, Avatar என்று காட்சி மாறும்
ஏன் என்று தெரியாத கேள்வி
ஏகாந்தம் பூசிக்கொண்ட வானம்
கண்ணை மூடி காட்சி மறக்கையில்
கற்பனையில் வந்து போகும் கரும்புள்ளி

போகுமிடமெல்லாம் பூத்து கிடக்கிறது - அரைகுறையாய் விளங்கும்
அந்நிய மொழி சம்பாஷனைகள்
கணன்று வரும் கோபமும்....
யதார்த்ததின் மீதான பிடிப்புகளும்....

தனியான பயணங்களை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறது மனசு
எப்போதோ கேட்ட பாடல் மீதான ஈர்ப்பு
இப்பொழுதும் விளங்காத இருண்மை
என்னவென்று தெரியாத தருணங்களில்
எதுமே செய்யாது இருக்கிறது உள்ளுணர்வு
"இது இப்படித்தான்"
இன்னும் எத்தனை நாள்களுக்கு?
ஏதேதோ....
கனவை கடந்து போகும் கற்பனைகள்

தூக்கம் மறந்த இரவுகள்....
சூன்யத்தில் இருப்பை தக்க வைப்பதற்கான போராட்டங்கள்....
இன்னும் தொடர்கின்றன
புரிதலும்....
தெரிதலும்....

மையப்புள்ளியில் மனசு நிற்கிறது
கண்கள் மட்டும் காட்சி திரைக்கு அப்பால்!
அவமானப்பட்ட தருணங்கள் அப்படியே ஆழ்மனதில் நிற்கிறது!
மொழிகளின் ஆளுமையை இழந்து விட்ட பிறகு....
ஒற்றை பெருமூச்சு!
இயலாமையின் வீச்சு!
எங்கோ தொலைவில் ஒற்றை காகம் கரைகிறது.

கடந்து போனவர்கள்

free counter

நான்....

My photo
Colombo, Sri Lanka
மனசுக்குள் ஒரு சாத்தான் அது மெல்ல வளர்ந்து விஸ்வரூபம் எடுக்க துடிக்கிறது.... நடிக்கிறது! அந்த காட்சி குழப்பத்தில் மனசும் கொஞ்சம்தான் கிறங்கி போகிறது! இன்றோ, நாளையோ... நான் ஒரு துரோகி! அல்லது நேற்றாகக்கூட இருந்திருக்கலாம்!

கூடவே வருபவர்கள்